நாகர்கோவில், ஜன.29: நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 718 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்பான ஜாக்ேடா ஜியோ சார்பில் கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் நடந்த போராட்டத்திற்கு ஆசிரியர் சங்க நிர்வாகி சேவியர், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், அரசு ஊழியர் சங்க நிர்வாகி நாஞ்சில் நிதி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச்செயலாளர் கனகராஜ், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜாண் உபால்டு, விமல்சங்கர், சுரேஷ்குமார், ஜெயபால், முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் முன், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 534 பெண்கள் உட்பட 718 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்து தங்கவைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் இருந்து கடைசி நேரத்தில் அழைத்து சென்று ரிமாண்ட் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன. இதற்கு சக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.டைசியில் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமின் வழங்கியது. இதனால் அவர்களை ஜெயிலில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று போராட்டத்தில் ஆவேசமாக பேசுபவர்கள், போராட்டத்தினை வழி நடத்தி செல்பவர்களை கண்டறியும் விதமாக மப்டியில் கூடுதல் போலீசார் போராட்ட களத்தில் நிறுத்தப்பட்டு போராட்ட குழுவினரை வீடியோவில் பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் போராட்டம் நடந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.