பட்டுக்கோட்டை, ஜன. 25: பட்டுக்கோட்டை அடுத்த சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளியின் 13வது ஆண்டு விழா நடந்தது. பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சின்னையன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சுவாமிநாதன், செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஓய்வுபெற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி பேசுகையில், ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கேற்ப இன்றைய கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கல்வியில் தான் அடங்கியிருக்கிறது. கல்வியே எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஆயுதம். இந்த கல்வியை படிக்கிற காலத்திலேயே நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்றைய படிப்பாளர்கள், நாளைய தலைவர்கள் என்றார்.பள்ளி இயக்குனர்கள் டாக்டர் ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், ராமையா, ரத்தினக்குமார், ராஜமாணிக்கம், மோகன், டாக்டர்கள் கண்ணன், பிரசன்னா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவி தலைமை ஆசிரியை ஸ்ரீபிரியா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் முகம்மது அக்பர்அலி வரவேற்றார். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.