திருவாரூர், ஜன. 24: திருவாரூரில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நாலரை பவுன் செயினை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். திருவாரூர் அருகே உள்ள திருநெய்பேர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெயசுதா(40). திருவாரூர் வேளாண் துறையில் ஊழியராக பணியாற்றி வரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது கணவருடன் பைக்கில் திருவாரூர் வடக்கு வீதி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ஜெயசுதா கழுத்தில் கிடந்த நாலரை பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதனையடுத்து ஜெயசுதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தங்களது பைக் மூலம் அந்த மர்ம நபர்களை துரத்தி சென்றனர். மேலும் இந்த தகவலானது அவசர போலீஸ் மூலம் தெரிய வரவே தஞ்சை சாலையில் விளமல் பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த ஹெல்மெட் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம் (30) மற்றும் சேது (43) என்பதும் தெரியவந்தது.மேலும் அவர்களிடமிருந்த செயின் மற்றும் பைக்கினை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் இருவரும் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.