புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கறவை பசு, வெள்ளாடு, செம்மறியாடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை முகாம் இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச கறவை பசுக்கள் மற்றும் இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் 2018-19ல் 450 பயானாளிகளுக்கு 450 கறவைப்பசுக்கள், 5,440 பயனாளிகளுக்கு 21,760 வெள்ளாடுகள் வழங்கப்படவுள்ளது. இலவச கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடு, செம்மறியாடு வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்களது கால்நடைகளை கொள்முதல் செய்த பிறகு நன்கு பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு மேற்படி ஆண்டுகளின் தமிழ் புத்தாண்டு தினத்தில் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. இலவச கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடு, செம்மறியாடு வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கறவை பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்கவும், வெள்ளாடு, செம்மறியாடுகளின் எடையை அதிகரிக்கவும் இன்று (24ம் தேதி), நாளை (25ம் தேதி) கறவை பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை, வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. இலவச கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடு, செம்மறியாடு வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் மட்டும் அல்லாமல் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.