×

வேலூர் அடுத்த பொய்கையில் நகை கடை உடைத்து ஒரு கிலோ வெள்ளி திருட்டு பள்ளிகொண்டாவில் திருட முயற்சி

வேலூர், ஜன.24: வேலூர் அடுத்த பொய்கையில் நகை கடை உடைத்து ஒரு கிலோ வெள்ளியை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். அதேபோல் பள்ளிகொண்டாவில் நகை கடை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. வேலூர் அடுத்த செதுவாலையை சேர்ந்தவர் அசுவத்தாமன்(37). இவர் பொய்கையில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு அசுவத்தாமன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில் கடையின் ஷட்டர் உடைந்து கிடைப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அசுவத்தாமன், உடனடியாக கடைக்கு சென்று பார்த்தபோது சுமார் 1 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடைக்குள் நுழைந்த மர்ம ஆசாமி முகமூடி அணிந்து வந்துள்ளான். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு நகை கடையை மர்ம ஆசாமிகள் நேற்றிரவு உடைக்க முயன்றுள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vellore ,jewelry store ,Pallikonda ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...