மன்னார்குடி, ஜன. 23: சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மன்னார்குடிக்கு அடுத்துள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தை மாதத்தில் மகம் நட்சத்திரம் தினத்தன்று தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது .கோயிலிலிருந்து பூமி, நீலா தாயார்கள் சமேதராக புறப்பட்ட சீனிவாசப் பெரு மாள் சேரன்குளம் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.
அதனை தொடர்ந்து கோயிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் கட்டப் பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினார்.பெருமாளுக்கு விஷேச தீபாராதனைகள் நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, பின்னர் வானவேடிக்கைகள் முழங்க தெப்போற்சவம் நடை பெற்றது. இரவு துவங்கி நேற்று அதிகாலை வரை குளத்தில் மூன்று முறை வலம் வந்து தெப்பத்தில் இருந்து அருள்பாலித்த சீனிவாச பெருமாளை குளத்தின் கரைகளில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.