திருப்புவனம், ஜன. 23: திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ‘சீல்’ வைக்கப்பட்ட அறை புண்ணாக்கு மூட்டைக்காக திறக்கப்பட்டது.திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிக்ப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 27ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தரப்பினரும், தமாகா மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தரப்பினரும் தேர்தலில் போட்டியிட்டனர். 28ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவேண்டிய நிலையில், நீதிமன்ற உத்தரவால் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது. அதனால் இதுவரை வாக்கு எண்ணிக்கை நடக்கவில்லை. வாக்குப்பெட்டிகள் உள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்த அறையில் சங்க வரவு-செலவு ஆவணங்களும், 81 புண்ணாக்கு மூட்டைகளும் உள்ளதால் இவற்றை எடுக்க விசாரணை ஆணைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நேற்று திறக்கப்பட்டது. அப்போது காலை 11 மணியளவில் சங்க அறை துணைப்பதிவாளர் கணேசன், தேர்தல் நடத்தும் அதிகாரி நடராஜன், இன்ஸ்பெக்டர சேது ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது பாலசுப்பிரமணியன் தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வந்திருந்தனர். சேங்கைமாறன் மற்றும் தரப்பினர் வந்தனர். அங்கு வந்த சேங்கைமாறன், அங்குள்ள செயலாளரிடம் சேர் கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதனை எடுத்துக் கொடுத்துள்ளார். அதற்கு பதிலளித்த தமாகா நகர் தலைவர் பாரத்ராஜா, அதே செயலாளரிடம் தனக்கும் சேர் தருமாறு கூறியுள்ளார். இதில் சேங்கைமாறன் தரப்பினருக்கும், பாரத்ராஜா தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அங்கிருந்து இன்ஸ்பெக்டர் சேது முன்னிலையில் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வேட்பாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் அந்த அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த அறை திறக்கப்பட்டது. அதிலிருந்து 81 புண்ணாக்கு மூடைகள், ஆவணங்கள் வெளியில் எடுத்து வைக்கப்பட்டு பின்னர் அந்த அறைக்கு சீல் வைத்து பாதுகாப்பாக பூட்டினர்.