வேதாரண்யம், ஜன.23: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், கஜா புயலுக்கு பிறகு போதிய உணவின்றி பறவைகள் அலைகின்றன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனி சிறப்பு. மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்கு நாரை, சிவப்புகால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மா சிறவி வகைகள், இலங்கை கடல்காகம், ஆர்டிக் பிரதேசம் ஆர்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசம் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகை பறவைகள் என இந்தாண்டு 25 வகை பறவைகள் வந்து சென்றன.