ஊட்டி, ஜன. 23: கல்லட்டி சாலையில் மசினகுடி பகுதிக்கு சிறிய வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என படுக தேச பார்ட்டி வலியுறுத்தியுள்ளது,
இக்கட்சியின் தலைவர் மஞ்சை மோகன் மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஊட்டியில் இருந்து தலைகுந்தா, கல்லட்டி வழியாக மசினகுடி மற்றும் முதுமலை செல்லும் வாகனங்கள் அடிக்கடி கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் சிக்கிக் கொள்வதால், பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி நடக்கும் விபத்துக்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த விபத்தில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளே பாதிக்கின்றனர். இதனால், இச்சாலையில் வெளியூர் மற்றும் வெளிமாநில வாகனங்களை காவல்துறை தற்போது அனுமதிப்பதில்லை. இது வரவற்கதக்கது. ஆனால், தற்போது சிறிய வாகனங்கள் செல்லவும் காவல்துறை அனுமதிக்கப்படுவதில்லை.இதனால், மசினகுடி, கல்லட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவ்வழித்தடத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அனைத்து சிறிய வாகனங்களும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொக்காபரம், சிறியூர் மாரியம்மன் கோயில், ஆைனக்கட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவும் நடக்கவுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இச்சாலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மஞ்சை மோகன் கூறிள்ளார்.