×

மதுக்கடை தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

மேட்டூர், ஜன.18:  மேட்டூர் அரகே கருமலைக்கூடலில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலை சேர்ந்தவர் ராஜா(47). தொழிலாளியான இவர், நேற்று மாலை மேட்டூர் ஆர்எஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பேட்டை நகரை சேர்ந்த குமரவேல் மகன் பிரசாந்த்(21) என்பவரும் இருந்துள்ளார். மதுக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மது குடிக்கும் போது ராஜா, பிரசாந்த் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பிரசாந்த், ராஜாவின் பைக்கை எட்டி உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தின் கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் ஆவேசமாக குத்தினார். இதைப்பார்த்த மது குடித்துக் கொண்டு இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கருமலைக்கூடல் போலீசார், பிரசாந்தை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்கு பின் அவரை, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கத்தியால் குத்திய ராஜா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மேட்டூர் எலிக்கரட்டில் டாஸ்மாக் கடையில் நடந்த பிரச்னையில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்றும் மதுக்கடையில் கத்திக்குத்து நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


Tags :
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது