க.பரமத்தி,ஜன.18: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி தைப்பூச தேரோட்டத்திற்காக தேர் தயார் செய்யும் பணி நடைபெற்றது. கரூர் வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோயிலில் தைபூசம் தேரோட்டம் விழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இக்கோயில் தேரை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.இவ்விழாவையொட்டி கடந்த 15ம்தேதி பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு தைப்பூச தேரோட்ட விழாவிற்காக கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, தினமும் மண்டலப்படி பூஜைகள், நடத்தப்பட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் (21ம் தேதி) மாலை 4.30மணிக்கு நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.