×

காரியாபட்டி-நரிக்குடி சாலை ‘கண்டம்’ - புதிய சாலை அமைக்கப்படுமா?

காரியாபட்டி, ஜன.18: காரியாபட்டி-நரிக்குடி சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். காரியாபட்டி அருகே சத்திரப்புளியங்குளம், ஸ்ரீராம்பூர், முடுக்கன்குளம், மரைக்குளம் ஆகிய கிராம மக்கள் அடிப்படை தேவைகளுக்கு காரியாபட்டிக்குதான் செல்ல வேண்டும். இவர்கள் காரியாபட்டி-நரிக்குடி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலை சுமார் ஆறு வருடங்களுக்கு முன் தார்ச்சாலையாக இருந்தது. தற்போது கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. முஷ்டக்குறிச்சி வழித்தடத்தில் கஞ்சமநாயக்கன்பட்டி, ஆலங்குளம் ரோடு படுமோசமாக உள்ளது. இந்த ரோடுகளில் டூவீலரில் கூட செல்ல முடியவில்லை. அடிக்கொருமுறை டயர் பஞ்சராகிவிடும்.  இழுப்பைக்குளம் விலக்கு அருகில் உள்ள ஓடுபாலம் மிகவும் சேதமடைந்து படுகுழியாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் வர தயங்கி பல கி.மீ தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நகரங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் போக முடியவில்லை. இது போன்று கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தரமான சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,Continent ,Kariapatti-Narikudi ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...