×

சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற ஐகோர்ட் உத்தரவு

மதுரை, ஜன. 18:  சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்த சிவஞானம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கோட்டைப்பட்டி கிராமத்திலுள்ள மின்கம்பம் அதிகம் சேதமடைந்துள்ளது. எந்த நேரமும் கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. கீழே சாய்ந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன் சேதமடைந்துள்ள மின்கம்பியை உடனடியாக அகற்றவும், புதிய மின்கம்பம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். அப்போது மோசமான நிலையில் மின்கம்பி இருப்பதற்கான ஆதாரமாக போட்டோக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை பார்த்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர். அப்போது, இரும்பு மின்கம்பிகள் இருப்பு இல்லாததால் உடனடியாக மின்கம்பத்தை மாற்ற வாய்ப்பில்லை. 4 வார காலத்தில் இந்த மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்படும் என கூறப்பட்டது. விருதுநகர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தரப்பிலும் 4 வாரத்தில் மாற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மின்சார வாரிய அதிகாரிகள் உறுதியளித்தபடி 4 வாரத்திற்குள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய இரும்பு மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...