பரமத்திவேலூர், ஜன.11: பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழா, கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்களை தட்டுகளில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோயிலை வந்தடைந்தனர். பின்னர், நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று மாலை மாவிளக்கு, பொங்கல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.