×

பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரிக்காததால் தொடர் அவலம்

மயிலாடுதுறை, ஜன.11: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 2009 முதல் பாதாள சாக்கடைத்திட்டம் முழுமையான செயல்பாட்டிற்கு வந்தது. தரமான பொருட்களை கொண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று நகர்நலவாசிகளால் புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது பாதாள சாக்கடை திட்டத்தின் பராமரிப்பு பணியை, பாதாள சாக்கடை கட்டிய அதே நிறுவனமே செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடை பைப் உடைந்து அதற்குள் மண் உள்வாங்கியதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது, கச்சேரி சாலையை தொடர்ந்து ஜூலை மாதத்தில் தரங்கை சாலை, கிளைச்சிறைச்சாலை அருகே, அய்யாரப்பர் கீழவீதி போன்ற இடங்களில் பைப்புகள் பழுதாகி உடைந்து கழிப்பறைநீர் வெளியேறியது தெரியவந்தது. அவற்றை பல வாரங்களுக்கு பிறகே சீரமைத்தனர். கழிவுநீரைக் கொண்டு செல்லும் பைப்புகள் முற்றிலும் தரமற்று இருப்பதால் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு நகராட்சிக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் கஜா புயலின்போது டபீர் தெரு முனையில் தரங்கை சாலையில் இதே போன்று திடீர்பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல தெருக்கள் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதைவிடுத்து கடந்த டிசம்பர் 7ம் தேதி மீண்டும் கிளைச்சிறைச்சாலை அருகில் பாதாள சாக்கடை பைப்லைன் உடைந்து போக்குவரத்தை தடைசெய்தது. அவற்றை செரிசெய்து சரியாக ஒரு மாதத்தில் நேற்று தரங்கை சாலை கொத்தத் தெரு பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. பாதாள சாக்கடையால் முக்கிய சாலைகளில் பள்ளம் ஏற்படுவது இது 7வது இடமாகும்.

மயிலாடுதுறை நகரில் சேகரிக்கப்படும் அனைத்து கழிவுகளும் தரங்கை சாலையில் போடப்பட்டுள்ள குழாய் வழியாகத்தான் மன்னம்பந்தல் ஆறுபாதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும். ஒவ்வொரு முறை பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டால் நகராட்சிக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது, மயிலாடுதுறை மக்களின் வரிப்பணம் பாதாள சாக்கடையில் போய் விழுவது வேதனையளிக்கிறது.  
நாகை மாவட்ட நிர்வாகம் இந்த பாதாள சாக்கடை திட்டத்தையும், தரத்தையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி உடனே அரசு நிதி ஒதுக்கி மயிலாடுதுறையில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தை புணரமைக்க வேண்டும். இல்லை என்றால் நகராட்சி நிதி முழுவதும் பாதாள சாக்கடைக்கே செலவாகும் நிலை ஏற்படும்.
இதுகுறித்து நாகை கலெக்டர் சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய சொல்லியுள்ளோம். விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு
கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிம்மதியை இழந்த மக்கள்
வருடத்திற்கு ரூ.1.10 கோடி செலவு செய்தும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் மயிலாடுதுறை மக்களுக்கு நிம்மதி என்பதே இல்லை. தற்பொழுது ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்வதற்குள் நகரில் உள்ள 8 கழிவு நீரேற்று நிலையங்களும் நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தினால் வீடுகளிலிருந்து மேன்ஹோலில் விடப்படும் கழிப்பறைநீர் சாலைகளில் வெளியேற துவங்கும். அல்லது அவரவர்கள் வீட்டிற்குள் தேங்கும் அபாயம் ஏற்படும். உடனே இந்த திட்ட பராமரிப்பு பணிகளை மயிலாடுதுறை நகராட்சியே ஏற்று நடத்த வேண்டும். இந்த திட்ட குளறுபடிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மயிலாடுதுறை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்