திருப்பூர்,ஜன.11: பொங்கல் பரிசு வழங்குவதில் பல்வேறு பகுதிகளில் குளறுபடி நீடிப்பதாக திருப்பூர் மாநகர் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழக கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கடந்த 6ம் தேதி தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோவும், 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்புத் துண்டு என ரூ. 126. 50 மதிப்பிலான பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது.
இவை தவிர இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சில கடைகளில் பொருட்கள் வழங்காமல் பொதுமக்களை அலைக்கழித்தனர். இதனால் பல பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருவாயை இழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் 1100 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்நிலையில் அவைகளை முறைப்படுத்தாமல் பொதுவாக தேதியை அறிவித்தால் குவியலாக பொதுமக்கள் வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது.
ராயபுரம் போன்ற பகுதிகளில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது, அதுமட்டுமல்லாமல் பாளையக்காடு பகுதியில் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெற்றது.மேலும் அரசு வழங்ககூடிய பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்க அந்தந்த பகுதி அதிமுக பிரமுகர்கள் வரும் வரையில் பொதுமக்கள் கடும் வெயிலில் காத்திருந்தனர்.இந்த அரசு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா அதிமுகவின் கட்சிவிழாவை போல கொண்டாடி மக்களை காக்கவைத்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.