×

காட்டுமன்னார்கோவிலில் மின்தடை எதிரொலி பொங்கல் பரிசு பெற திரண்ட மக்கள்

காட்டுமன்னார்கோவில், ஜன. 11: காட்டுமன்னார்கோவில் அருகே பொங்கல் பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலே தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமப்பகுதி நியாய விலைக்கடைகளிலும் நேற்று தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கபணம் உள்ளிட்டவை அடக்கம். இந்நிலையில் இன்று (11ம் தேதி) காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என துணைமின் நிலையம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே மின்தடை என்பதால் ஸ்மார்ட் கார்டு இயந்திரம் இயங்காது, அதனால் மறுநாள் பரிசுப்பொருட்களை பெறமுடியாது என்ற வதந்தி அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது. இதன் காரணமாக நேற்று காலை 9 மணிக்கே அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசுப்பொருட்களை பெற பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர். பச்சிளங் குழந்தைகளுடன் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் வரிசையில் நின்று இப்பொருட்களை பெற்று சென்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பயனாளிகளுக்கு இவைகளை வழங்க முடியாமல் நியாயவிலைக்கடை ஊழியர்கள் பெரிதும் திணறினர். குறிப்பாக கரும்புகட்டுகளை பிரித்து அதனை சரியாக  2 அடிக்கு துண்டுகளாக வெட்ட வேண்டும். மேலும் வறுமை கோட்டுக்குள் வராதவர்களை சரிபார்த்தல் போன்ற பணிகளினால் அவர்கள் பெரிதும் திக்குமுக்காடினர்.

இதுகுறித்து வரிசையில் காத்திருந்தவர்கள் கூறுகையில், பொங்கல் பரிசுகள் கொடுப்பதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு முறைப்படுத்தியிருக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒருநாள் முழுவதும் நியாய விலைக்கடை முன்பு காத்திருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இதனால் தங்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டன என குற்றம் சாட்டினர்.

Tags : Pongal ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...