திருச்செங்கோடு, ஜன.10: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது. ஆத்தூர், சின்னசேலம், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 50 மூட்டை எள் மற்றும் 100 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இவற்றை வாங்குவதற்காக பவானி. அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, சுமார் 30 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ரகசிய ஏலம் நடத்தினர்.
இதில் கருப்பு எள் கிலோ ₹112 முதல் ₹128.90 வரையும், சிகப்பு எள் கிலோ ₹65.50 முதல் ₹82.80 வரையும், வெள்ளை எள் கிலோ ₹123.80 முதல் ₹128.90 வரையும் விற்பனையானது. அதுபோல் ஏலத்தில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,396 முதல் ₹5,859 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 50 மூட்டை எள், 100 மூட்டை பருத்தி ஆகியவை ₹5 லடசத்திற்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.