×

பெருந்துறை, கொடுமுடி, அந்தியூரில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு

பெருந்துறை, ஜன. 10:   தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, பச்சரிசி மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.நேற்று பெருந்துறையில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் 87,648 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பெருந்துறை சக்தி மண்டபத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன்  தலைமையில் நடந்தது. இதில் பெருந்துறை எம்.எல்.ஏ., தோப்பு. வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கி பேசினார். விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மணி, பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் துரைசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் விஜயன், துணை தலைவர் ஜெகதீஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கொடுமுடி: ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவிற்குட்பட்ட சிவகிரி, கொடுமுடி, கிளாம்பாடி  ஆகிய பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கான ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் 3 ஆயிரத்து 614 பேர், பொருள் வேண்டாம் என்பவர்கள் 15 பேர், இதர கார்டுகள் வைத்துள்ளவர்கள் 7 ஆயிரத்து 830 என மொத்தம் 40 ஆயிரத்து 79 கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு ரூ.3 கோடியே 79 லட்சத்து 91 ஆயிரத்துக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த கார்டுகளில் 37 ஆயிரத்து 991 கார்டுகளுக்கு மட்டுமே தற்போது ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ரேஷன் கார்டுகள் வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியம், ஈரோடு எம்.பி., செல்வகுமார சின்னையன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினர்.
 இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி யூனியன் முன்னாள் சேர்மன் கணபதி, ஆவின் இயக்குனர் அசோக்குமார், கூட்டுறவு சங்க தலைவர் தட்சணாமூர்த்தி, கொடுமுடி விதை நேர்த்திக்குழு உறுப்பினர் கலைமணி, முன்னாள் அமைச்சர் பி.சி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
  இந்நிலையில் மதியம் பொங்கல் பரிசு விநியோகம் செய்ய ஐகோர்ட் தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனை அடுத்து ஆளுங்கட்சி பிரமுகர்கள், மற்றும் அதிகாரிகள் பொங்கல் பரிசு தொகை வழங்குதற்கான கூப்பன்களை மட்டும் அவசரமாக விநியோகித்தனர். இதனால் பொங்கல் பரிசு பொருட்களுடன் பணத்தையும் வாங்கிசெல்ல ஆவலுடன் வந்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஐ தவிட்டுப்பாளையத்தில் அரசு சார்பில் பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் தியாகராஜன் முன்னிலையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ., ராதாகிருஷ்ணன் பொங்கல் பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கினார். அந்தியூரில் 124 ரேஷன் கடைகளும் 68 ஆயிரத்து 500 ரேஷன் கார்டுகள் உள்ளன.
சேலை வேஷ்டியுடன் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், பாலுசாமி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அத்தாணி ரேஷன் கடையில் கூட்டுறவு வங்கி தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிமுக., நகர பொறுப்பாளர் திருமுருகன் முன்னிலையில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.


Tags : Kodumudi ,Anduriyur ,Perundurai ,
× RELATED கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்...