திருத்துறைப்பூண்டி ஜன.10: வரம்பியத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கஜாபுயல் பாதிப்பில் இருந்து மீளவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வரம்பியம் ஊராட்சியில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார், திமுக தலைமை பிரதிநிதி எம்எல்ஏ ஆடலரசன் பங்கேற்றார். ஊராட்சி சபை கூட்டத்தில் மடப்புரம் மேரி பேசும் போது கஜாபுயல் பாதிப்பில் இருந்து நாங்கள் மீண்டு வரவில்லை, மகளிர் குழு கடன்களை வங்கிகள் கடன்களை உடன் கட்ட கட்டாயப்படுத்துகின்றன. தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைவசதி செய்து தரப்படவில்லை என்றும் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என்றார். விட்டுக் கட்டி மகாதேவன் காலனி சுந்தர்ராஜன் பேசும் போது : 30 ஆண்டுகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது பதிவு செய்த அதிமுகவினருக்கு உடனடியாக வேலை வழங்கப்படுகிறது என்றார். பொதுமக்களின் கேள்விகளுக்கு ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ ஆடலரசன் பதில் அளித்து பேசினார். இதில் திமுக அவைத் தலைவர் ராஜரத்தினம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சேது முருகானந்தம், ராஜா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.