மயிலாடுதுறை ஜன.10: நாகை மாவட்டம் மயிலாடுதுறை வள்ளாலகரம் வெங்கடேஸ்வரா நகரில் செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அய்யங்கார் அப்பன் (65) என்பவர் இரவு 10 மணி வரை கோயிலில் இருந்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மார்கழி மாத பூஜைக்காக அப்பகுதியை சோமுபிள்ளை என்பவர் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தார். அப்பொழுது கோயில் வெளிக்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சுவற்றில் பதித்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது, மேலும் விநாயகருக்கு அணிவிக்கப்பட்டிருந்த வௌ்ளி ஆபரணங்கள் (ஒரு கிலோ எடை) கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.