×

பெட்ரோல் பங்க்கில் பகுதி நேரமாக பணியாற்றும் ஐடிஐ மாணவனுக்கு சரமாரி வெட்டு

ஆவடி: ஆவடி, பட்டாபிராமில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பகுதி நேர பணியாளரான ஐடிஐ மாணவனை சரமாரியாக வெட்டி, இயந்திரத்தை அடித்து நொறுக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடி அடுத்த பட்டாபிராம் கோபாலபுரம் சித்தேரிகரை பகுதியை சேர்ந்தவர் புருசோத்தமன் (18). அம்பத்தூர் தொழிற்பேட்டை அரசு ஐடிஐ.யில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், பட்டாபிராம், சிடிஎச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பகுதி நேர ஊழியராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு புருசோத்தமன் விற்பனை நிலையத்தில் ஒரு ஆட்டோவிற்கு காஸ் நிரப்பி கொண்டு இருந்தார். அப்போது, அங்கு மற்றொரு ஆட்டோவில் வந்த நபர்கள், தங்களது வாகனத்திற்கு உடனடியாக நிரப்ப வேண்டும் என கூறியுள்ளனர்.

அதற்கு, புருசோத்தமன் வரிசையில் வருமாறு அவர்களிடம் கூறியுள்ளார்.  உடனே ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ஒருவன் ஆட்டோவில் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து புருஷோத்தமன் தலையில் சரமாரியாக வெட்டினார். மேலும் காஸ் நிரப்பும் இயந்திரத்தை அடித்து நொறுக்கி விட்டு அந்த கும்பல் தப்பியது.இதில் படுகாயமடைந்த புருஷோத்தமனை சக ஊழியர்கள் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் காஸ் நிரப்பும் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் புருஷோத்தமனை வெட்டி, இயந்திரத்தையும் அடித்து, சூறையாடிய கும்பலை  தேடி வருகின்றனர்.

Tags : student ,ITI ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...