×

பள்ளி காவலாளி கொலையில் 2 பேர் கைது

திருக்கழுக்குன்றம், ஜன.9:  திருக்கழுக்குன்றம் ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (64). திருக்கழுக்குன்றத்தில் உள்ளு அரசு உதவி பெறும் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 31ம் தேதி இரவு பணிக்கு சென்ற ராமசாமி, மறுநாள் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் பள்ளிக்கு சென்றனர். அப்போது, பள்ளியின் பின் பகுதியில் ராமசாமி ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். புகாரின்படி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில், எஸ்ஐக்கள் விஜயகுமார், செந்தில்வேல், காவலர்கள் ஆறுமுகம், கோபி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் திருக்கழுக்குன்றம் மலையடிவாரப் பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் சுற்றி திரிந்தனர். அவர்களை, தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். பின்னர், 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், திருக்கழுக்குன்றம் இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் (18), கொத்திமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த மோகன் (19) என தெரிந்தது. மேலும் விசாரணையில், பிடிப்பட்ட 2 பேர் மற்றும் இவர்களது நண்பர்் ஒருவருடன் கடந்த 30ம் தேதி மாலை மது அருந்த மேற்கண்ட பள்ளிக்கு சென்றனர். அப்போது அங்கு காவலுக்கு இருந்த ராமசாமி “இங்கு ஏண்டா குடிக்க வர்றீங்க. உள்ளே வராதீங்கடா,  வெளியே போங்கடா” என்று சத்தம் போட்டு கல்லால் அடித்து துரத்தினார்.இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், காவலாளியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.

மறுநாள் (31ம் தேதி) மாலை மீண்டும் அந்த பள்ளிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த காவலாளி ராமசாமியை இரும்பு ராடு, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் சரமாரியாக அடித்து, பள்ளியின் பின் பகுதியில் இழுத்து சென்று போட்டுவிட்டு, தப்பியதாக வாக்குமூலம் அளித்தனர் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு