மதுரை, ஜன. 9: மதுரை மாநகரில் தினமும் 1000 டன் நச்சு புகை வெளியேறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாநகர் எல்கையை ஒட்டி நான்குவழிச்சாலை ஓரம் கோழிக்கழிவுகள் மலைபோல் குவிக்கப்பட்டு தீ வைக்கப்படுவதாலும் புகை வெளியேறி நச்சு பரவுகிறது.
பருவநிலை மாற்றத்தில் மதுரையின் பங்கு முக்கிய இடம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்தியாவில் நச்சு புகை அதிகம் வெளியாகும் 40 நகரங்களின் பட்டியலில் மதுரை இடம் பெற்றுள்ளது. இங்கு, சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியைச் சேர்ந்த இக்லி என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் எரிசக்தி பயன்பாட்டிலுள்ள தெருவிளக்குகள், நீரேற்று நிலையங்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஆய்வு செய்யப்பட்டன. நகர் பகுதியில், எரிசக்தி பயன்பாடு மூலம் வெளிப்படும் கரியமில வாயு ஆண்டுக்கு 3 லட்சம் டன்னாக அளவிடப்பட்டது. இதில், மாநகராட்சி மூலமாக மட்டும், 4 ஆயிரம் டன் கரியமல வாயு அடங்கும். இதேபோல், மதுரை நகருக்குள் ஓடும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இருந்து அதிகளவில் நச்சுப்புகை வெளியாவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாநகராட்சி, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படாமல் புகை மாசு அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை திருப்பரங்குன்றம், அவனியாபுரம் நோக்கி வீசுகிறது. காலாவதியான அரசு பஸ்கள், லாரிகள், ஆட்டோ, சேர் ஆட்டோ, டூவீலர்கள் நச்சு புகையை கக்குகின்றன.இதனால் நந்சு புகை வெளியேற்றம் அதிகரித்துள்ளது. தற்போது மதுரை மாநகர் எல்லைக்குள் மட்டும் ஒரு நாளில் சுமார் 1000 டன் அளவுக்கு நச்சு புகை வெளியேறி விண்ணில் பறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த சூழலில் மாநகர் எல்கையை ஒட்டி ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் வழியில் தேசிய நான்குவழிச்சாலை, ஒத்தக்கடை வேளாண் கல்லூரி எதிர்புறமுள்ள சாலை ஓரங்களில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளன. அதில் தீ வைக்கப்பட்டு, புகை மண்டலமாகி பரவுகிறது. அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, “மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், சுற்று வட்டாரங்களில் இருந்து கோழிக் கழிவுகளை இரவில் கொட்டுகின்றனர். இது காற்றில் பறப்பதால் தீ வைத்து விடுகின்றனர். இதிலிருந்து வெளியாகும் நச்சுப்புகை நோய் பரப்பும் அபாயம் ஏற்படுகிறது” என்றனர்.