திருப்பரங்குன்றம், ஜன. 9: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று காலை 11 மணியளவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் வலம் வந்தனர். நேற்று கொடியேற்றத்துடன் துவஙகிய விழாவில் தினமும் காலை வேலையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கச்சப்பரத்திலும், மாலை வேலையில் பூத வாகனம், அன்ன வாகனம், புஷ்பசப்பரம், மயில் வாகனம், ரத்தின சிம்மாசனம், பச்சை குதிரை வாகனம் ஆகியவற்றில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
தெப்பத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ஜன. 16, 17 தேதிகளில் நடைபெறுகிறது. ஜன.16ம் தேதி சிறிய வைரத்தேரில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிறிய வைரத்தேரில் ரத வீதிகளை வலம் வருதலும், அதே நாளில் தெப்பம் முட்டுதள்ளுதலும் நடைபெறும். ஜன.17ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தெப்பத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் அன்று மாலை சுவாமி தெப்பத்தை வலம் வந்து தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா சென்று பின்னர் சூரசம்ஹார லீலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர்(பொ) மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர் (பொ) கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்து வருகின்றனர்.