×

மானிய ஸ்கூட்டர் பெற விண்ணப்பம் வரவேற்பு

கிருஷ்ணகிரி, ஜன.9:   கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு, அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ₹25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீத தொகை, இவை இரண்டில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ₹31 ஆயிரத்து 250 வழங்கப்படும். 125 சிசிக்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த மானியம் பெற, பயனாளிகள் 18 வயது முதல் 40 வயதிற்குள் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ₹2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மானியத் தொகை போக இருசக்கர வாகனத்தின் மீதத் தொகை செலுத்த விருப்பம் உள்ளவர்கள் மட்டும், இத்திட்டத்தில் பயன்பெறலாம். பயனாளிகள் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளி மட்டுமே தகுதியுடைவர் ஆவர். மேலும் அமைப்புசாரா மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள். கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள். சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள். அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம். வேலை செய்யும் மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண்கள், பெண்களை குடும்பத் தலைவராக கொண்டு குடும்பங்களில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதிற்கு மேல் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இம்மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டிற்கு ஊரக பகுதிகளுக்கு 2030 மற்றும் நகர்புறப் பகுதிகளுக்கு 603 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இன்று (9ம் தேதி) முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வருகிற 18ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்