கம்பம், ஜன.8: கம்பம் நகராட்சியில் போக்குவரத்து பாலம் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 9வது வார்டு, 8வது வார்டு, மற்றும் இங்குள்ள பல்வேறு தெருக்களில் போக்குவரத்து பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களின் வழியே தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதால் டூவீலர்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன.கம்பம் நகராட்சியில் சேனை ஓடை செல்கிறது. போக்குவரத்து பாலத்தின் இரண்டுபுறமும் சுற்றுச்சுவர் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆனால், சுவர்கள் சேதம் அடைந்தாலோ அல்லது சுவர்கள் இல்லாத பாலங்களிலோ மக்கள் செல்வதற்கே அச்சமாக இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கதையாகி வருகிறது.
இரவுநேரங்களில் வாகனங்கள் செல்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் போக்குவரத்து பாலங்கள் உள்ள இடங்களில் சுற்றுச்சுவரை கட்ட வேண்டும்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` கம்பத்தில் மிக முக்கியமான போக்குவரத்து பாலங்களின் இரண்டுபுறமும் சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனை கட்டிதர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.