கோவை, ஜன. 8: கோவை தெலுங்குபாளையம் நெடுஞ்செழியன் வீதியில் சின்னத்துரை என்பவருக்கு சொந்தமான குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 19ம் தேதி சோதனை நடத்தினார். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 1,460 பாக்கெட் குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தார். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். இதைத்தொடர்ந்து, அந்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்நிலையில், குடோன் பின் பக்கம் இருந்த கதவை உடைத்து அங்கிருந்த குட்கா பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலசுப்ரமணியம் கொடுத்த புகாரின்பேரில், செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.