×

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

முத்துப்பேட்டை, ஜன.8: முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 717-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா  நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று அதிகாலை சுபுகு தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆ ஓதப்பட்டது. அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை கந்தூரி விழா தொடக்கமாகவும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும்  நாதஸ்வரம் மற்றும் மங்கல இசை வாசிக்கப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, இஸ்லாமிய இன்னிசை வாசிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை பிரார்த்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டது.
பின்னர்  பூபல்லக்கின் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் தர்காவிலிருந்து புறப்பட்டு ஜாம்புவானோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்காவை அடைந்தது. பின்னர் கொடியேற்றும்  நிகழ்ச்சி  முதன்மை அறங்காவலர் எஸ்எஸ். பாக்கர் அலி சாஹிப் தலைமையில் துவங்கியது. பின்னர்  தர்கா டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் துஆ ஓதினார்.தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை ஓதப்பட்டு இரவு 9 மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்..திருவாரூர் எஸ்.பி துரை மேற்பார்வையில்  டி.எஸ்.பி.இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்,  எஸ்ஐ கணபதி மற்றும்  ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : dargah kanduri festival ,
× RELATED கீழ்வேளூர் அருகே ஆழியூர் செய்யது...