பூந்தமல்லி, ஜன. 8: பூந்தமல்லியில் சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.சென்னை போரூர், கணேஷ் அவென்யூ சக்தி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் மோகன் (58). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, கேரளாவில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கிருந்து நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. பீரோ லாக்கரில் வைத்திருந்த 50 சவரன் நகைகள், ₹50 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் ₹25 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போரூர் போலீசில் மோகன் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை தடயங்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.