குளத்தூர், ஜன. 4: பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ வேண்டி குளத்தூர் ஓம் சக்தி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
குளத்தூர் தெற்கு கண்மாயோரம் குழந்தைவிநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள ஓம் சக்தி கோயிலில் குளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓம் சக்தி பக்தர்கள் 200க்கும் மேற்பட்டோர் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உலக நண்மை வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தணியவும், பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ சிறப்பு கூட்டு வழிபாடு நடந்தது. இதில் 108 மற்றும் 1008 மந்திரங்கள் தமிழ் வழியில் கூறி பக்தர்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை சக்தி மன்ற பொறுப்பாளர்கள் உஷாராணி, வெண்ணிலா, செல்வம், தூத்துக்குடி இளைஞரணி பொறுப்பாளர்கள் கண்ணன், முருகன் செய்திருந்தனர்.