×

கிரண்பேடிக்கு நாராயணசாமி நன்றி

புதுச்சேரி, ஜன. 4:   புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கும் எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து அகற்றுவதற்காகவும் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் அனைத்து கட்சி சார்பில் இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 21 கட்சிகள், அமைப்புகளை ேசர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். முதல்வர் நாராயணசாமி தலைமையில் இப்போராட்டம் நடக்கிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கவர்னரிடம், டெல்லியில் அனைத்துக் கட்சி சார்பில் `கிரண்பேடியே திரும்பிப் போ’ என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டபோது, அனைவரும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த கவர்னர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறவும், அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து அகற்றுவதற்காகவும் அவரே வாழ்த்து தெரிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் பதிவிட்டுள்ளார்.

Tags : Narayanasamy ,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை