கரூர்,ஜன.4: கரூர் வெள்ளியணை அருகே டாஸ்மாக் பொறுப்பாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை வடக்கு பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் அருகிலேயே பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் வெள்ளியணையை சேர்ந்த லோகநாதன் என்பவர் நின்று கொண்டு தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாரின் பொறுப்பாளர் அசோக்குமார், லோகநாதனிடம் சென்று வெளியே செல்லுமாறு கூறினார். இதில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், அசோக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் லோகநாதன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.