காஞ்சிபுரம், ஜன.4: பெரும்புதூர் வட்டம், வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த ராயப்பா நகர் பாரதியார் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தலைவர் முத்து, செயலாளர் மோகன், பொருளாளர் சரவணக்குமார் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். மனு விவரம்: பெரும்புதூர் வட்டம் வரதராஜபுரம் ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இதில் 1 வது வார்டு காலனியில் ஒகு இடுகாடு உள்ளது. மேலும் 5 வது வார்டு பகுதியில் இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ளது. மீதமுள்ள 4 வார்டுகளில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். ஆனால் எங்கள் பகுதிக்கென்று தனியாக இடுகாடு இல்லை. எனவே, வரதராஜபுரம் வார்டு 1 சுடுகாட்டை பயன்படுத்த முற்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள 1.50 அரசு ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. எனவே, எங்கள் பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்துவதற்கு அந்த இடத்தை ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.