தஞ்சை, ஜன. 3: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தமிழ் பண்பாட்டு மையத்துக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை சமீபத்தில் கிடைத்தது என்று துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கூறினார்.இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு மையம் நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுவாழ் மற்றும் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பண்பாட்டை கொண்டு சேர்ப்பதற்காக இம்மையம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் நாட்டியம், பாட்டு, நாட்டுப்புறக்கலை, யோகா உள்ளிட்ட கலைகள் கற்று தரப்படுகின்றன. அந்தந்த பகுதியில் தமிழ் பண்பாட்டு கலையை கற்பவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் சார்பில் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இம்மையத்துக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு சமீபத்தில் கிடைத்தது.
இதேபோல் தமிழ் வளர் மையத்துக்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.2 கோடிக்கான அரசாணை விரைவில் கிடைக்கவுள்ளது. இப்பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. இப்பல்கலைக்கழகத்தில் வெளியீட்டுத்துறை மூலம் 509 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 237 நூல்கள் அச்சில் இல்லை என்பது தெரியவந்தது. இவற்றில் 200 நூல்கள் தமிழக அரசின் உதவியுடன் மார்ச் மாதத்துக்குள் மறு பதிப்பு செய்யப்படவுள்ளது. மேலும் 38 பேருக்கு ஆய்வு நல்கையாக ரூ.50,000 வீதம்
வழங்கப்பட்டுள்ளது என்றார்.