கோவை, ஜன.3: தமிழகத்தில், மகளிர் சுய உதவி குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகளிர் குழுவினர் பாக்கு மட்டை, பேப்பர் டம்ளர், துணிப்பை, வீட்டு அலங்கார பொருட்கள், மூலிகை தொடர்பான பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் இவற்றை சந்தைப்படுத்தி விற்க முடியாத நிலையில் மகளிர் குழுவினர் தவித்து வருகின்றனர். மாவட்ட அளவில், மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்கள் போதுமான அளவு விற்பனையாகாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பொருட்காட்சி, பொங்கல் விழா, சித்திரை விழா, கைத்தறி துணி காட்சி விழா போன்றவற்றில் மகளிர் குழுக்களின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கிராம கோயில் திருவிழாக்களிலும் மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயில் விழாக்களில் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதன் மூலமாக மகளிர் குழுக்கள் மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது.