ஊட்டி, டிச. 28: பனியின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்கும் வகையில் ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் மீது தாவை எனப்படும் காட்டு செடிகள் வைத்து பாதுகாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் மாத துவக்கம் வரை நீர்பனி காணப்படும். தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி காலம். இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். உறைபனி சமயத்தில் புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் கடும்பனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டி கிடக்கும் பனியை காண வெள்ளை கம்பளம் விாித்து போல் காணப்படும். உறைபனியின் தாக்கத்தால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள தேயிலை செடி கருகிவிடும். மேலும் வனப்பகுதிகளில் செடி, கொடிகள் அனைத்தும் பனியின் தாக்கத்தால் கருகி பசுமை இழந்துவிடும். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் உறைபனி சீசன் துவங்குவதற்கு முன்பே தாவை எனப்படும் காட்டு செடிகள், தென்னை ஓலைகள், வைக்கோல் போன்றவற்றை கொண்டு தேயிலை செடிகள், மலர் செடிகள் போன்றவற்றை பனியில் இருந்து காக்கும் வகையில் மூடிவிடுவார்கள். இதன் மூலம் உறைபனியின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகள், மலர் செடிகளை விவசாயிகள் காத்து வந்தனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சிறு சிறு செடி, கொடிகள் புற்கள் கருக துவங்கியுள்ளன. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. ஊட்டியில் பொழிந்து வரும் பனியின் தாக்கத்தில் இருந்து ஊட்டி மரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகளை காக்கும் வகையில் தாகை எனப்படும் காட்டு செடியை கொண்டு மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. போக போக உறைப்பனியின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்பதாலும் துவக்கத்திலேயே மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகளை பாதுகாக்கும் பணியை பூங்கா ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.