×

முசிறி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை ஈமக்காரியத்திற்கு சமையல் செய்தபோது 2 வீட்டில் தீ

தா.பேட்டை, டிச.28: முசிறி  அடுத்த வீரமணிப்பட்டி கிராமத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஈமக்காரியம் முடிந்து சமையல் செய்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த  வீரமணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (50), கூலித்தொழிலாளி. இவரது மனைவி  சரசு (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. மணி மது குடித்து விட்டு  வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று  முன்தினம் மனஉளைச்சலுடன் காணப்பட்ட மணி அரளி விதையை அரைத்து  குடித்துள்ளார். இதில் உயிருக்கு போராடியவரை அருகிலிருந்தவர்கள் முசிறி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை  பலனின்றி மணி நேற்று இறந்து போனார். முசிறி போலீசார் மணியின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத  பரிசோதனைக்குப்பின் வீட்டிற்கு உடல் எடுத்து வரப்பட்டது. பின்னர் உறவினர்கள்  இறுதி சடங்கு முடித்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் சமையல்  செய்த போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதில் வீட்டின் மேற்கூரையில்  பிடித்த தீ பரவியது. சிறிது நேரத்தில் அருகில் வசிக்கும் பிரகாஷ் என்பவரின் கூரை வீடும்  தீப்பிடித்து எரிந்தது.  அருகிலிருந்தவர்கள் உடனடியாக முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்பு துறையினர் தீ  மேலும்  பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து  சேதமானது. தீ விபத்தினால் வீடு இழந்த இரு குடும்பத்தினரும் தங்களுக்கு  குடியிருக்க வீடும், வாழ்வாதாரத்திற்கான உதவியும் செய்து தர  வேண்டுமென கோட்டாட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Musiri ,suicides ,
× RELATED முசிறியில் பாரிவேந்தர் வாகனத்தை...