ஆண்டிபட்டி,டிச.28: ஆண்டிபட்டி பகுதியில் மண்டல பூஜையை முன்னிட்டு கிராமங்கள் விழா கோலம் பூண்டது. இதனால் சுவாமிகள் பக்தர்களின் பரவசத்தால் வீதி உலா வந்தன.
ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியில் உள்ள ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் விரதமிருந்து கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து பஜனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மண்டல பூஜையை முன்னிட்டு கிராமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலையில் ஐயப்பன், முருகனுக்கு தனித்தனி சப்பரம் அமைத்து ஊரின் முக்கிய வீதிகளில் நகர் வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்தில் பாட்டுப் பாடி, ஆட்டம் ஆடி சென்றனர். இதே போன்று ஆண்டிபட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் மண்டல பூஜை நடைபெற்றது.