×

ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறப்பதால் வீட்டு மனைகளாக மாறிய 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்

திருவள்ளூர், டிச. 28: திருவள்ளூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு வசதியாக கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறந்து வருகிறது. இம்மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலுக்காக விவசாய நிலங்களை வீட்டு மனையாக பிரிக்கும் திட்டங்களுக்கு வேகமாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம், புன்செய் நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற வீட்டு மனை திட்டத்துக்கு நில வகை மாற்றத்திற்கான விண்ணப்பத்தை பெறுவது, அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படாத ஒரு தனி பிரிவே செயல்படுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கு அதிகாரிகளுக்கு ரியல் எஸ்டேட் அதிபர்களின், ‘‘கவனிப்பே’’ காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், மணலி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு மனை பிரிவுகள் அதிகமாக உள்ளன.

இவற்றில் பல நன்செய் நிலங்களாக இருந்தவை. பொதுவாக புன்செய் நிலங்கள் மட்டுமே, வீட்டு மனைகளாக பிரிக்க அனுமதி உண்டு. நன்செய் நிலங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பயிர் செய்யாமல் விடப்பட்டால் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் அது உறுதி செய்யப்பட்ட பின்னர் ஆட்சேபம் இல்லாத பட்சத்தில் புன்செய் நிலமாக மாற்றம் செய்யப்படும்.அதன்பின் அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரிக்கலாம். தற்போது ரியல் எஸ்டேட் அதிபர்கள், நன்செய் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, ஓரிரு ஆண்டுகளிலேயே புன்செய் நிலமாக மாற்றிவிடுகின்றனர். அதன்பின், உரிய அனுமதி பெற்று வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

விஷயம் தெரிந்தே ஏக்கருக்கு, சில லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் நில வகை மாற்றம் செய்கின்றனர். எனவே விவசாய நிலத்தின் பரப்பளவு வேகமாக குறைந்து வருகிறது. ஒருபுறம் விவசாய நிலங்கள், புன்செய்யாக மாற்றப்பட்டு வரும் நிலையில் புள்ளியியல் துறையில் அது குறித்து பதிவேடுகள் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால், விவசாய நிலம் குறையாததுபோல புள்ளி விவரத்தை அரசுக்கு பொய்யாக கொடுத்து ஏமாற்றும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இனியும் அதிகாரிகள் உடனே சுதாரிக்காவிட்டால் விவசாய நிலங்கள் வேகமாக அழிவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்றனர்.

Tags : land ,homeowners ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!