×

70 அடி உயர குடிநீர் தொட்டி மேலிருந்து குதித்து வியாபாரி தற்கொலை சேத்துப்பட்டில் பரபரப்பு

சேத்துப்பட்டு, டிச.25: சேத்துப்பட்டில் 70 அடி உயரமுள்ள குடிநீர் தொட்டியின் மேல் இருந்து நெல் வியாபாரி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டை நல்லதண்ணீ குளத்தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன்(45), நெல் வியாபாரி. இவரது மனைவி சிவசங்கரி(38). இவர்களுக்கு மதுமிதா(16), தட்சணா(14) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கன்னியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.நோய் சரியாக வேண்டுமென்றால் குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று உறவினர்கள் கூறினர். இதனை தொடர்ந்து கன்னியப்பன் உடனடியாக குடிப்பழக்கத்தை நிறுத்தினார். இருப்பினும் அவருக்கு அடிக்கடி மனமாற்றம் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் கன்னியப்பனை மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

இதையறிந்த கன்னியப்பன் தன்னை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து விடுவார்களோ என்ற பயத்தில் நேற்று காலை 10 மணியளவில் வீட்டின் அருகே உள்ள 70 அடி உயரமுள்ள குடிநீர் தொட்டி மீது ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அங்கு வந்த பேருராட்சி ஊழியர் இதுபற்றி சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.இச்சம்பவம் இப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் அப்பகுதி மக்கள் மற்றும் கன்னியப்பனின் உறவினர்கள் ஓடிவந்து சடலத்தை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, கோவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.70 அடி உயர குடிநீர் தொட்டி மேலிருந்து குதித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...