ஜோலார்பேட்டை, டிச.25: ஜோலார்பேட்டை அருகே 2 ஆண்டுகளாக சீரான முறையில் குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் நேற்று அரசு பஸ்சை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் தாயப்பன் வட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியினருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்துளை கிணற்றில் இருந்து சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லையாம்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளர் சங்கரிடம் முறையிட்டுள்ளனர். அதேபோல் பிடிஓ அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7 மணியளவில் காலி குடங்களுடன் திருப்பத்தூர்- நாட்றம்பள்ளி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். தகவலறிந்த ேஜாலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், பிடிஓ பிரேம்குமார் ஆகியோர் வந்து சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு, ‘கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை உள்ளது. ஊராட்சி செயலாளர், அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.அமைச்சரிடம் விடுத்த கோரிக்கையின்பேரில் கடந்த 1 மாதத்திற்கு முன் காந்திநகரில் தனியாக போர்வெல் அமைக்கப்பட்டது. ஆனால் காந்தி நகர் மக்கள், எங்களுக்கு தண்ணீர் வழங்க மறுத்து பைப்லைனை துண்டித்துவிட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் குடிநீர்வரி, வீட்டுவரி கட்டினால்தான் நூறுநாள் வேலை தருவேன் என ஊராட்சி செயலாளர் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ேமலும் புதிதாக குடிநீர் ஆபரேட்டரை நியமிக்கவேண்டும். எனக்கூறினர்.இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக 1.30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.