பாபநாசம், டிச. 21: பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தை சேர்ந்த மர வியாபாரி ராமன் (60). இவர் நேற்று முன்தினம் இரவு பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை நோக்கி பைக்கில் சென்றார். அய்யம்பேட்டை அடுத்த கோயிலடி அருகில் சென்றபோது தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த லோடு ஆட்டோ மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பலியானார். ராமன் வந்த பைக் மீது மோதியதுடன் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ, திருச்சி சமயபுரம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த சப்பரத்தின் மீதும் மோதியது. இதில் சப்பரத்தில் பயணம் செய்த வலங்கைமான் அடுத்த பாடகச்சேரியை சேர்ந்த ராஜா காயமடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர் தற் கொலை: தஞ்சை அடுத்த மேலவஸ்தாசாவடியை சேர்ந்தவர் மூர்த்தி (34). ஆட்டோ டிரைவர். இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. டாக்டர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக மனமுடைந்த நிலையில் மூர்த்தி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ஷோபனா கொடுத்த புகாரின்பேரில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது: பூதலூர் பாரி காலனி அருகே புதுஆற்றுக்கரையில் சிலர் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பூதலூர் சப்இன்ஸ்பெக்டர் சித்ரா, ஏட்டு சரவணன் மற்றும் காவலர் கரிகாலன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பூதலூர் ஜீவாநகர் சேகர் (எ) குண்டுசேகர் (57) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து சேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.