புதுக்கோட்டை, டிச.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் கணேஷ் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடந்த ஜூலை 15 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடற்ற வளாகங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களான விரிப்பு, தட்டு, தண்ணீர் பாக்கெட், பை போன்றவற்ளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தூக்கி எறியப்படும் நெகிழிகளுக்கு மாற்றுப் பொருளாக வாழை இலை, துணி, காகிதம், சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் குவளைகள் போன்ற பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்த்து மாற்று பொருட்களை உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் புதுக்கோட்டை மாவட்டத்தை ‘பிளாஸ்டிக் பயன்பாடற்ற புதுக்கோட்டையாக” மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.