×

பிரபல பத்திரிகையின் ஊழியர்கள் என கூறி டாஸ்மாக் பாரில் பணம் பறித்த போலி நிருபர்கள் 6 பேர் கைது

சென்னை, டிச. 21: பிரபல பத்திரிகையின் நிருபர்கள் என கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக் பார்களில் மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 6 போலி நிருபர்கள் பிடிபட்டனர்.   மீஞ்சூர் போலீசார் நேற்று இரவு 10.30 மணியளவில் வல்லூர் 100அடி சாலையில்  வாகன சோதனை செய்தனர். அப்போது சென்னையில் இருந்து மீஞ்சூர் நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.காரில் இருந்த 6 பேர் தங்களை பிரபல பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் என்று போலீசாரிடம் கூறினர். அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் எண்ணூர் காசிம் பாஷா (34), தமிழ் பாஷா (31) மற்றும் வருண்குமார் (33), வியாசர்பாடி அப்துல் ரகுமான் (32), அடையாறு யுவராஜ் (30) மற்றும் வேலூரை சேர்ந்த பாபு (28) ஆகியோர் என்பதும், நிருபர்கள் என்று கூறிக்கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக் பார்களில் மிரட்டி பணம் பறிப்பது, லாரி உரிமையாளர்களிடம் அதிக லோடு ஏற்றுவதாக கூறி பணம் வசூலிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டு உள்ள காசிம்பாஷா மீது சாத்தாங்காடு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : journalists ,bar ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்