புதுக்கோட்டை, டிச.18: புதுகை மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் ராமர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டு, அதற்காக முதற்கட்டமாக இந்த ஆண்டு பயிற்சிக்காக ரூ.50 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவியுடன் பயிற்சி அளிக்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.