×

சமையல் செய்தபோது தீப்பொறி விழுந்து பர்னிச்சர் கடையில் தீவிபத்து: பஞ்சு மூட்டைகள் சாம்பல்

வேளச்சேரி:  வேளச்சேரி மெயின் ரோடு மேடவாக்கம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் மீரான் (53). அதே பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். 2வது தளத்தில் குடோன் உள்ளது. இதனருகில் உள்ள வீட்டில் மீரான் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  நேற்று காலை 11 மணியளவில் மீரானின் மனைவி சமையல் செய்வதற்கு காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, காஸ் தீர்ந்துவிடவே மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தீப்பொறி குடோனில் வைத்திருந்த பஞ்சுமூட்டை மீது விழுந்து தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீரான் குடும்பத்தினர் அலறியடித்து கீழே ஓடிவந்தனர். பின்னர், இதுகுறித்து வேளச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் முகமது அயூப், துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணுசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஞ்சு மூட்டைகள், கட்டில்கள், சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : fireplace shop ,
× RELATED சமையல் செய்தபோது தீப்பொறி விழுந்து...