நாகை.டிச.18: நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 323 மனுக்கள் குவிந்தன.நாகை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வங்க கடன் மற்றும் உதவித்தொகை கேட்டு 12 மனுக்களும், பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 311 மனுக்கள் என 323 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 55 கிலோ பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த சுபா மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்று சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராஜேஷ் ஆகியோரை கலெக்டர் சுரேஷ்குமார் வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டியும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 4 பயனாளிகளுக்கு திருநங்கைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க ஆணையினையும் வழங்கினார். அப்போது தனித்துறை கலெக்டர் வேலுமணி உள்ளிட்டோர் இருந்தனர்.