ஊத்தங்கரை, டிச.16: தென்னிந்திய அளவிலான கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வித்யா மந்திர் கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகம் அளவில் கல்லூரிகளுக்கிடையேயான கபடி நடைபெற்றது. இதில் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வெங்கடஜலம்(பொ) தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு கபடி அணியை தேர்வு செய்தனர். இதில், ஊத்தங்கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த இளங்கலை 3ம் ஆண்டு வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை மாணவன் சூர்யா தேர்வு செய்யப்பட்டு தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இப்போட்டிகள் சென்னையில் வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவனுக்கு கல்லூரியின் நிறுவனர் சந்திரசேகரன், செயலாளர் ராஜீ, முதல்வர் அருள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் திருமூர்த்தி, லட்சுமணன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.