கன்னியாகுமரி, டிச. 16: சபரிமலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம் வலியுறுத்தினார்.தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம் நேற்று கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றம் பல சூழ்நிலைகளில் பலவிதமான தீர்ப்புகளை கூறியுள்ளது. சபரிமலை வழக்கில் இந்துக்கள் தரப்பில் ஆச்சாரங்கள் குறித்து வாதங்கள் முன்வைக்கப்படவில்லை. இந்துக்களின் பாரம்பரியத்தில் 800 ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இதையெல்லாம் நீதிபதிகள் முன்பு வைக்க தவறிவிட்டனர். சமீபத்தில் கேரளாவில் மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரள அரசு கால அவகாசம் கேட்டது. இது கேரளாவில் உள்ள மைனாரிட்டி சமூகத்துக்கான தீர்ப்பாகும். ஆனால் பெரும்பான்மையான இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உச்சநீதிமன்றத்தில் சபரிமலை விவகாரத்தில் அரசு கால அவகாசம் கேட்கவில்லை. இதில் கேரள அரசின் உள்நோக்கம் தெரிய வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் காஷ்மீர் இந்துக்களின் நிலைதான் கேரள மாநில இந்துக்களுக்கும் ஏற்படும். 5 மாநில தேர்தலில் பாஜ வெற்றிபெறாவிடினும் அதன் கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட அக்கட்சியினர் இந்து கோயில்களுக்கு சென்று தங்களின் நிலைப்பாட்டை காட்டிக்கொண்டனர். நடிகர்கள் சினிமாவில் முதல்வராக நடிக்கலாம். ஆனால் அரசியலில் அனுபவம் வேண்டும். வரும் ஜனவரி 20ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 5,400 தம்பதிகளுக்கு சத்ய நாராயணா பூஜை நடத்தப்படுகிறது. நாட்டின் எல்லை பிரச்னைகள் தீர ஜனவரி 5 முதல் 17 வரை கன்னியாகுமரியில் பாராயண நிகழ்ச்சி மற்றும் யாகம் நடக்கிறது.